மாவட்டத் தொழில் மையம் உருவாக்கிய ஒரு தொழில் முகவர் சிவகங்கையைச் சேர்ந்தவர் திருமதி அஞ்சலை. அவர் சுய தொழில் தொடங்க வேண்டும் என நீண்ட காலமாக எண்ணி வந்தார். ஆனால், அவருக்குப் போதிய பொருளாதார வசதி இல்லை. ஆதலால் அவருடைய எண்ணம் அவருக்குக் கனவாகவே இருந்து வந்தது. சிறு தொழிலோ, பெருந்தொழிலோ எதுவானாலும் அதைத் தொடங்கிட அரசு எல்லா வகையிலும் உதவி வருகிறது. குறு சிறு நடுத்தரத் தொழில்துறை மாவட்டங்களில் உள்ள மாவட்டத் தொழில் மையங்கள் மூலம் தொழில் தொடங்க விரும்புவோருக்கு ஏராளமான உதவிகளைச் செய்கிறது. திருமதி அஞ்சலை நெய்யப்படாத பைகள் தயாரிப்பதில் ஆர்வமும் அனுபவமும் உள்ளவர். அவர், சிவகங்கையில் உள்ள மாவட்டத் தொழில் மையத்தைத் தேடிச் சென்றார். அங்கு பைகள் தயாரிக்கும் தொழில் தொடங்குவதற்கு உதவி கோரினார். அவரின் தொழில் ஆர்வத்தைக் கண்ட தொழில் மையம் அவருக்கு ரூ. 32 லட்சத்து 70 ஆயிரம் வங்கிக் கடன் பெற உதவியது. அந்தக் கடனில் 11 இலட்சத்து 30 ஆயிரம் ரூபாயை அஞ்சலிக்கு மானிய உதவியாக அரசு தந்தது. எஞ்சிய கடன் தொகைக்கான வட்டியிலும் 6 சதவீதம் வட்டித் தொகையை மானியமாக அரசு அளித்தது. இந்தக் கடன் தொகையைப் பெற்று அஞ்சலை நெய்யப்படாத பைகள் தயாரிக்கும் சிறு தொழிலைத் தொடங்கினார். அவரது தொழில்கூடத்தில் 10 ஊழியர்கள் வேலை செய்கிறார்கள். இந்தத் தொழிலில் அஞ்சலைக்கு மாதம் ரூபாய் 4 லட்சத்திற்குப் பொருள்கள் விற்பனையாகின்றன. அவருக்கு 10 ஊழியர்களின் சம்பளம் உட்படச் செலவுகள் போக மாதம் ரூ. 70 ஆயிரம் லாபம் கிடைக்கிறது. திருமதி அஞ்சலை தற்பொழுது ஒரு தொழில் முதலாளி. அவர் மட்டுமல்ல. அஞ்சலை போல எவரும் மாவட்ட தொழில் மையத்தின் உதவியோடு தொழில் தொடங்கி தொழில் முதலாளி ஆகலாம். தமிழ்நாடு அரசின் குறு சிறு நடுத்தர தொழில் துறை இந்த வாய்ப்பை எல்லோருக்கும் அளிக்கிறது. வெளியீடு: இயக்குநர், செய்தி மக்கள் தொடர்புத்துறை, சென்னை 9