உலக முதியோர் தினம் உலக முதியோர் தினம் ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 1 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. நம் நாட்டில் சில வேளைகளில் புறக்கணிக்கப்பட்டு வரும் மூத்த குடிமக்களின் முக்கியத்துவத்தை உணர்த்தவே இந்நாள் கடைபிடிக்கப்படுகிறது. நமது முதியவர்களை மகிழ்ச்சியோடு வைத்துக் கொள்ளும் கடமை நமக்கு இருக்கிறது என்பதை இந்நாள் வலியுறுத்துகிறது. முதியோரின் பங்கு உலகம் முழுவதும் ஓர் இடம் சார்ந்த புரட்சி ஆண்டாண்டு காலமாக நடந்து வருகிறது. உலக சுகாதார நிறுவனத்தின் புள்ளி விவரப்படி உலக அளவில் 60 வயதுக்கும் மேற்பட்டோர் 60 கோடி பேராகும். 2025 ஆம் ஆண்டு இது இரட்டிப்பாகி, 2050 ஆம் ஆண்டு 200 கோடியைத் தாண்டி விடலாம். இவர்களில் பெரும்பானமையோர் வளர்ந்து வரும் நாடுகளில் இருப்பார்கள். மருத்துவ வளர்ச்சி, ஊட்டச்சத்து மேம்பாடு, சுத்தம், மருத்துவ அறிவியல், சுகாதார பராமரிப்பு, கல்வி மற்றும் பொருளாதார உயர்வு ஆகியவற்றால் வாழ்நாள் அளவு உயர்ந்து வருகிறது. தன்னார்வ பணிகளினாலும், அனுபவங்களையும் அறிவையும் பகிர்ந்து கொள்வதாலும், பொறுப்புகளை ஏற்று குடும்பத்துக்கு உதவி செய்வதாலும் இந்த வேகமான வாழ்க்கை முறையில் முதியோர் முக்கியமான பங்கை ஆற்றுகின்றனர். முதியோரின் முழு பங்களிப்பு அனைத்துத் தலைமுறைகளுக்கும் மிகுதியான பலனைக் கொண்டு வரும். முதியோரின் பிரச்சனைகள் வயதாகும் போது நீடித்து நிலைக்கும் நோய்கள் உருவாகி முதிய மக்கள் செயலிழந்து போகவும் வாய்ப்புண்டு. இதனால், சுதந்திரமாக வாழும் திறனை அவர்கள் இழந்து போக நேரிடும். அவர்களது நோய்த் தடுப்பு மண்டலம் பலவீனமாகி நோய்கள் தாக்கும் ஆபத்து ஏற்படுகிறது. பிறரைச் சார்ந்திருக்கும் நிலை, சமூக வாழ்க்கையில் இருந்து விலகல், குடும்ப உறுப்பினர்களால் புறக்கணிக்கப்படுதல் ஆகியவை மேலும் அவர்களது நிலையை மோசமாக்குகிறது. இதய நோய்கள், நீரிழிவு, மற்றும் புற்று நோய் போன்ற நீடித்த நோய்களே வளர்ந்து வரும் நாடுகளின் நோய்ப்பளுவிற்கு முக்கிய காரணங்கள் ஆகும். வயதாகும் நிலையிலும் ஆரோக்கியமாக அவர்கள் திகழ நீடித்த பராமரிப்பை அளிப்பது நமது கடமையாகும். சுகாதார பராமரிப்பு தேசியத் திட்டம் முதியோருக்கான அர்ப்பணிப்பின் ஒரு பகுதியாக இந்திய அரசு 60 வயதுக்கு மேற்பட்டோருக்கு முதியோருக்கான சுகாதார பராமரிப்பு தேசியத் திட்டத்தின் கீழ் பல்வேறு நோய்த் தடுப்பு, குணப்படுத்தல் மற்றும் மறுவாழ்வு சேவைகளை வழங்கி வருகிறது. மூத்த குடிமக்களுக்குத் தனித்த, சிறப்பான, விரிவான சுகாதார பராமரிப்பை, கடைக்கோடி வரை எட்டும் சேவைகளை உள்ளடக்கிய மாநில சுகாதாரப் பராமரிப்பு அமைப்புகள் மூலமாக அளிப்பதே முதியோருக்கான சுகாதாரப் பராமரிப்பு தேசியத் திட்டத்தின் அடிப்படை நோக்கமாகும். முதியோருக்கு ஏற்படும் பொதுவான நோய்கள் தசையெலும்பு: முதுமை மூட்டழற்சி, எலும்புப் புரை மற்றும் எலும்பு முறிவு. இயக்குநீர்: தைராயிடு கோளாறுகள், நீரிழிவு (சர்க்கரை), மாதவிடாய். நரம்பியல்: முதுமை மறதி, பார்க்கின்சன் நோய், பார்வை & கேள் திறன் குறைவு, சமநிலை இழப்பு. பார்வை: கண் புரை, கண்ணழுத்த நோய், மட்டுமன்றி நீரிழிவு, இரத்த அழுத்தம் போன்ற நோய்களால் உண்டாகும் சிக்கல்கள். இதய நோய்கள்: மாரடைப்பு, தமனித்தடிப்பு, இரத்த அழுத்தம். சிறுநீரகம்: நோய்கள் சிறுநீரகத்தைப் பாதித்தால் டயாலிசிஸ் போன்ற நீண்ட நாள் பராமரிப்பு தேவைப்படும். சிறுநீர் கழிப்பதில் சிரமம், சிறுநீரைக் கட்டுப்படுத்த இயலாமை. வாய்: பற்களை இழத்தல், ஈறு நோய், சரியாக பொருத்தப்படாத பற்கள். களைப்பு: களைப்பால் உண்டாகும் பலவீனம், எடை இழப்பு, மருந்துகளின் பக்க விளைவு, தூக்கக் கோளாறுகள், நடுக்கம். முதுமையில் ஏற்படும் பிரச்சனைகளை தனிப்பட்ட பிரச்சனையாக பார்க்காமல் சமூகப் பிரச்சனையாக நோக்க வேண்டும். ஒரு நாள் நமக்கும் வயதாகும். இன்று நமது முதியோர் சந்திக்கும் பிரச்சனைகளை நாளை நாமும் சந்திக்க நேரிடும். ஆகவே, கீழ் காணுபவை நமது கடமைகள் ஆகும்: முதியோரை விலை மதிக்க முடியாத வளமாக அங்கீகரிக்க வேண்டும். அவர்களின் கவலைகளை புரிந்து கொள்ள வேண்டும். அவர்கள் நேசிக்கப்படுவதை அவர்களுக்குப் புரிய வைக்க வேண்டும். தேவையான சுகாதாரப் பராமரிப்பையும் நல மேம்பாட்டையும் வழங்க வேண்டும். நீங்கள் 60 வயதுக்கு மேற்பட்டவரா? நீங்கள் 60 வயதுக்கு மேற்பட்டவர் என்றால் உங்கள் மேல் போதிய கவனத்தை நீங்கள் செலுத்த வேண்டும். கீழ் வருவனவற்றை நினைவில் வைக்கவும்: உங்கள் ஆரோக்கியத் தேவைகளை புரிந்து கொண்டு முறையாக நோய்த் தடுப்புக்கான பரிசோதனைகளை செய்து வரவும். உணவில் பழங்கள், காய்கறிகள், முழு தானியங்களை அதிகமாக சேர்த்துக் கொள்ளவும். புரதம், உயிர்ச்சத்து, தாது, நார்ச்சத்து நிறைந்த சமநிலை உணவை உண்ணவும். அதிக உடலிடை மோசமான விளைவுகளை உருவாக்கும். ஆகவே, மிதமான உடல் பயிற்சி முறையை பின்பற்றவும். வலிமை, சமநிலை, நெகிழ்வுத் தன்மைகளைப் பேண அது உதவி செய்யும். நடை, யோகா, தியானம் ஆகியவை நன்மை தரும். புகை, மது தவிர்க்கவும். போதுமான ஓய்வு தேவை. உடலை அதிகமாக வருத்தக் கூடாது. சமூக, கலாச்சார நடவடிக்கைகளில் ஈடுபடவும். குடும்பத்தோடும் நண்பர்களோடும் மகிழ்ச்சியாக இருக்கவும். பரிந்துரைக்கப்பட்ட மருந்துகளை மருத்துவர் ஆலோசனை இன்றி நிறுத்தக் கூடாது. “பொருளாதார, சமூக வளர்ச்சிக்கு முதியோர் பேரளவில் நன்மைகளை வழங்குகின்றனர். இருப்பினும், பாரபட்சமும், சமூக புறக்கணிப்பும் தொடர்கின்றன. சமூகப் பொருளாதார அளவில் செயல் திறனுடனும், பாதுகாப்பாகவும், ஆரோக்கியமாகவும் முதிர்ந்து வரும் மக்கள் கூட்டம் திகழுவதை உறுதிப்படுத்த நாம் இந்த பாரபட்சத்தைக் களைந்தே தீர வேண்டும்.” -பான் கி-மூன், பொது மேலாண்மைச் செயலாளர், ஐக்கிய நாடுகள் ஆதாரம்: தேசிய சுகாதார இணையதளம்