<div id="Middlecolumn_internal"> <h3 style="text-align: justify;">சுகன்யா சம்ரிதி யோஜனா திட்டம்</h3> <p style="text-align: justify;">சுகன்யா சம்ரிதி யோஜனா திட்டத்தின் மூலம் 10 வயதுக்குட்பட்ட பெண் குழந்தைகளின் மகிழ்ச்சியான எதிர்காலத்துக்காக புதிதாக ஒரு வங்கிக் கணக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.</p> <p style="text-align: justify;">பிறந்த பெண் குழந்தை முதல் 10 வயது வரையிலான பெண் குழந்தைகள் வரை யார் வேண்டுமானாலும் வங்கி அல்லது அஞ்சலகத்தில் இந்தக் கணக்கைத் தொடங்கலாம். இதில் ஒரு நிதியாண்டில் குறைந்தபட்சம் 250 ரூபாய் துவங்கி 1.5 லட்சம் ரூபாய் வரை அந்தக் குழந்தையின் பெயரில் சேமிக்கலாம். இப்படி 14 ஆண்டுகள் வரை இந்தக் கணக்கில் முதலீடு செய்ய வேண்டும்.</p> <p style="text-align: justify;">இந்தக் கணக்கை துவங்கிய பின் அந்தக் குழந்தையின் 18வது வயது வரை கணக்கில் செலுத்தியுள்ள பணத்தை எடுக்க முடியாது. அதன்பின் 50 சதவிகிதம் மட்டுமே எடுக்க அனுமதிக்கப்படும். இந்தக் கணக்கு 21 வருடங்கள் வரை செயல்பாட்டில் இருக்கும்.</p> <p style="text-align: justify;">ஒருவேளை இடையே திருமணம் நடந்தால், அந்த வருடத்தோடு இந்தக் கணக்கு முடிந்துவிடும். அதற்குப் பின் இந்தக் கணக்கை தொடர முடியாது. 21 வருடங்கள் கழித்து மீதமுள்ள தொகையையும் அதற்கான ஆண்டுக் கூட்டு வட்டியையும் பெறலாம்.</p> <p style="text-align: justify;">ஒரு பெண் குழந்தைக்கு அதிகபட்சமாக 10 வயதில் இந்தக் கணக்கைத் துவங்கினால் 31 வயது வரை அதன் கல்வி, திருமணம் உள்ளிட்ட அனைத்துத் தேவைகளுக்கும் உதவும் நோக்கில் இந்தத் திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த வைப்பு நிதிக்கு அரசு 8.1 சதவிகித கூட்டு வட்டியையும், முதலீட்டில் வருமான வரி விலக்கும் அளித்துள்ளது.</p> <p style="text-align: justify;">இதனால் இனி பெண் குழந்தைகள் கல்விக்கும், திருமணத்துக்கும் பணம் ஒரு தடையாக இருக்காது என்று அரசு கூறியுள்ளது.</p> <p style="text-align: justify;">ஆதாரம்: விகடன்</p> </div>