<div id="MiddleColumn_internal"> <h3 style="text-align: justify;">தேசிய சமூக உதவித் திட்டம்</h3> <p style="text-align: justify;">15.08.1995 முதல் அமலுக்கு வந்த தேசிய சமூக உதவித் திட்டமானது அரசியலமைப்பின் செய்முறைக் கொள்கை ஆணை (Directive Principles) - சட்டம் 41 மற்றும் 42ஐ நோக்கி ஒரு குறிப்பிடத் தகுந்த அடியினை எடுத்து வைத்துள்ளது. முதுமை, குடும்பத் தலைவரின் மரணம் மற்றும் பேறுகாலம் போன்ற சமயங்களில், ஏழ்மை நிலையிலிருப்பவர்களுக்கு உதவுவதற்காக ஒரு தேசிய சமுதாய நல உதவித் திட்டத்தை ஏற்படுத்தியுள்ளது.</p> <h3 style="text-align: justify;">இந்திய அரசியலமைப்பு</h3> <p style="text-align: justify;"><strong>சட்டம் 41: குறிப்பிட்ட சில நிலைகளில் வேலை, கல்வி மற்றும் பொது உதவிகளுக்கான உரிமை</strong></p> <p style="text-align: justify;">மாநில அரசானது, அதனுடைய பொருளாதார வளம் மற்றும் மேம்பாட்டினைப் பொறுத்து வேலை செய்ய உரிமை, கல்வி கற்க உரிமைக்கான உதவிகளைச் செய்கிறது. மேலும் வேலைவாய்ப்பின்மை, முதுமை, நோய், இயலாமை போன்ற இன்ன பிற தேவைகளுக்கான உதவியையும் செய்கிறது.</p> <p style="text-align: justify;"><strong>சட்டம் 42: நீதி மற்றும் மனிதாபிமான வேலையும் பேறுகால உதவியும் கிடைக்கப்பெறுதல்</strong></p> <p style="text-align: justify;">நீதியும், மனிதாபிமான அடிப்படையில் வேலை மற்றும் பேறுகால உதவியும் கிடைக்க மாநில அரசு வழிவகை செய்யவேண்டும்.</p> <h3 style="text-align: justify;">நோக்கங்கள்</h3> <ul style="text-align: justify;"> <li>தேசிய சமூக உதவித் திட்டமானது முழுமையாக 100 சதவிகிதம் மத்திய அரசால் பொறுப்பேற்று நடத்தப்படுகிறது. குறைந்தபட்ச சமுதாய உதவியை, மாநில மற்றும் யூனியன் பிரதேசங்கள் தரும் அல்லது தரக்கூடிய உதவியோடு மத்திய அரசும் தருகிறது..</li> <li>நாடு முழுவதும் சமமான சீரான சமுதாயப் பாதுகாப்பும் நல உதவியும் மக்கள் அனைவருக்கும் கிடைக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் மத்திய அரசு உதவுகிறது.</li> <li>மாநில அரசு செய்யும் உதவிக்குப் பதிலாக மத்திய அரசு சமுதாயப் பாதுகாப்பு நல உதவிகளைச் செய்வதில்லை. எனவே மாநில மற்றும் யூனியன் பிரதேசங்கள் தாங்கள் செய்ய எண்ணும் உதவிகளை சுதந்திரமாக மக்களுக்கு எப்போது வேண்டுமானாலும் செய்யலாம்.</li> <li>தேசிய சமுதாய நல உதவித் திட்டம், சமுதாய நல உதவித் திட்டங்களை ஒன்றோடு ஒன்றிணைத்து வறுமையை ஒழிக்கவும், அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்யவும் வாய்ப்பளிக்கிறது. உதாரணமாக, பேறுகால நல உதவியை தாய் - சேய் நல உதவித் திட்டத்தோடு இணைக்கலாம்.</li> </ul> <h3 style="text-align: justify;">தேசிய முதியோர் ஓய்வூதியத் திட்டம்</h3> <p style="text-align: justify;">இத்திட்டத்திலுள்ள தேசிய முதியோர் உதவித்தொகை திட்டத்திற்கு மத்திய அரசின் உதவியும் உள்ளது.</p> <p style="text-align: justify;">இவ்வுதவியினைப் பெற வேண்டிய தகுதிகள்:</p> <ul style="text-align: justify;"> <li>விண்ணப்பிப்பவரின் வயது (ஆண் அல்லது பெண்) 65 அல்லது அதற்கு மேல்</li> <li>விண்ணப்பிப்பவர் ஆதரவற்றவராகவோ, ஏழ்மையாகயிருப்பவராகவோ, பொருளாதார ரீதியில் உதவ யாருமில்லாதவராகவோ இருத்தல் வேண்டும்.</li> <li>முதியோர் உதவித்தொகை மாதத்திற்கு ரூ. 75</li> </ul> <h3 style="text-align: justify;">தேசிய குடும்ப நல உதவித் திட்டம்</h3> <p style="text-align: justify;">குடும்ப வருமானத்திற்கு பெரும் பங்களிக்கும் குடும்பத் தலைவரின் இறப்பினால் துன்பமுறும் குடும்பத்திற்கு இத்திட்டத்தின் கீழ் ஒரு மொத்தத் தொகை அக்குடும்பத்தின் நலத்திற்காகத் தரப்படுகிறது.</p> <p style="text-align: justify;">பின்வரும் நிபந்தனைக்களுக்கு உட்பட்டு மத்திய அரசு இத்திட்டத்தின் மூலம் உதவுகிறது:</p> <ul style="text-align: justify;"> <li>முதன்மை உணவு ஈட்டாளர் (primary breadwinner) அதாவது குடும்பத் தலைவர் அக்குடும்பத்தின் அங்கத்தினராக இருக்க வேண்டும்; அவர் ஆணாக இருந்தாலும் பெண்ணாக இருந்தாலும் குடும்ப வருமானத்தில் அவரது பங்கு கணிசமாக இருத்தல் அவசியம்.</li> <li>முதன்மை உணவு ஈட்டாளர் இறக்கும் போது அவரது வயது 18க்கு மேலாகவும் 65க்குக் குறைவாகவும் இருத்தல் வேண்டும்.</li> <li>குடும்பத் தலைவரை இழந்து வருந்தும் அக்குடும்பம், அரசாங்கம் அறிவித்துள்ள வறுமைக் கோட்டிற்குக் கீழே வசிப்பவர்களாக இருத்தல் வேண்டும்.</li> <li>முதன்மை உணவு ஈட்டாளரின் இறப்பு, இயற்கையாக இருந்தாலும், விபத்தாக இருந்தாலும் நல உதவித்தொகையாக ரூ. 10000 வழங்கப்படும்.</li> <li>குடும்பத் தலைவரின் மரணத்திற்குப் பின் உள்ளூரில் விசாரித்து அடுத்த முதன்மை உணவு ஈட்டாளரிடம் நல நிதியுதவி தரப்படும்.</li> </ul> <h3 style="text-align: justify;">தேசிய மகப்பேறு நல உதவித் திட்டம்</h3> <p style="text-align: justify;">இத்திட்டத்தின் கீழ் வறுமைக்கோட்டின் கீழ் வசிக்கும் கர்ப்பமாக இருக்கும், பெண்களுக்கு பின்வரும் நிபந்தனைகளுக்குட்பட்டு மத்திய அரசு உதவுகிறது.</p> <ul style="text-align: justify;"> <li>உயிருடன் இருக்கும் முதல் இரு குழந்தைகளின் கர்ப்ப காலங்களுக்கு மட்டுமே நல உதவி வழங்கப்படும். கர்ப்பமாக இருக்கும் பெண்ணின் குறைந்தபட்ச வயது 19 ஆகும்.</li> <li>பயன் பெரும் பெண் அரசாங்கம் அறிவித்துள்ள வறுமைக்கோட்டிற்குக் கீழே வசிப்பவராக இருத்தல் அவசியம்.</li> <li>நல உதவி ரூ. 500 ஆகும்.</li> <li>குழந்தை பிறப்புக்கு 8 முதல் 12 வாரங்களுக்கு முன்பு ஒரே தவணையாக உதவித்தொகை தரப்படும்.</li> <li>காலத்தே நல உதவி தரப்பட வேண்டுமென்பதில் அரசு கவனமாக இருக்கிறது. சில நேரங்களில் தாமதமானாலும் குழந்தை பிறந்த பின்பும் நல உதவி அளிக்கப்படுகிறது.</li> </ul> <h3 style="text-align: justify;">திட்டச் செயல்பாடு</h3> <ul style="text-align: justify;"> <li>நகராட்சி மற்றும் பஞ்சாயத்துகளின் உதவியோடு மத்திய அரசின் தேசிய சமுதாய நல உதவித் திட்டத்தின் கீழுள்ள நலத் திட்டங்களை மாநில அரசும், யூனியன் பிரதேசமும் செயல்படுத்தி வருகின்றன.</li> <li>ஒவ்வொரு மாநிலமும் / யூனியன் பிரதேசமும், தேசிய சமுதாய நல உதவித் திட்டத்தின் திட்டங்களைச் செயல்படுத்த ஒரு மாதிரித் துறையைத் (Nodal Department for Implementing NSAP) தேர்ந்தெடுத்து தேசிய சமுதாய நல உதவித் திட்டத்தின் வழிகாட்டுதலோடு நடத்தி வருகின்றன.</li> <li>தேசிய சமுதாய நல உதவித் திட்டம் குறித்து ஒவ்வொரு மாவட்டத்திலும் மாவட்ட அளவிலான ஆணையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.</li> <li>தேசிய சமுதாய நல உதவித் திட்டம் குறித்த மாவட்ட அளவிலான ஆணையங்களின் தலைமைப் பதவியிலிருக்கும் மாவட்ட நீதிபதி / மாவட்ட ஆட்சியருக்கு மாவட்டங்களும், யூனியன் பிரதேசங்களும் தேசிய சமுதாய நல உதவித் திட்டத்தின் கீழ் வரும் நல உதவித் திட்டங்களை அவரவர் பகுதியில் செயல்படுத்த ஆணை பிறப்பித்துள்ளன.</li> <li>மாநில / யூனியன் பிரதேசத்தின் ஆணையர் அல்லது இத்திட்டத்தின் தலைமைப் பொறுப்பில் இருப்பவரே தகுதியான விண்ணப்பங்களைத் தேர்ந்தெடுத்து உரிய நலயுதவி செய்வதற்குப் பொறுப்பானவராவார்.</li> <li>நல உதவியினை தலைமைப் பொறுப்பிலுள்ளவர்கள் தேசிய சமுதாய நல உதவித் திட்ட வழிகாட்டியில் கூறியுள்ளபடி பல முறைகளில் தகுதியானவர்களுக்கு உதவலாம்.</li> <li>மேலே குறிப்பிடப்பட்டுள்ள மூன்று நல உதவித் திட்டங்களுக்குத் தகுதியானவரைத் தேர்ந்தெடுப்பதில் கிராம பஞ்சாயத்து மற்றும் நகராட்சியின் உதவி அதிகமாகத் தேவைப்படுகிறது.</li> <li>ஆகையினால் மாநில அரசு இம்மூன்று நலத் திட்டத்தினால் பயன்பெற விழையும் மக்களை அந்தந்த பஞ்சாயத்து / நகராட்சியிடம் அனுப்பினால் பயனாளிகளை சுலபமாக மாநில அரசினால் கண்டுகொள்ள முடியும்.</li> <li>மத்திய அரசின் நலத்திட்ட உதவிகளான தேசிய முதியோர் ஓய்வூதியத் திட்டம் (NOAPS), தேசிய குடும்ப நல உதவித் திட்டம் (NFBS), தேசிய மகப்பேறு நிதியுதவித் திட்டம் (NMBS) இம்மூன்றையும் கிராமங்களில் நடைபெறும் கிராம சபா கூட்டத்திலும் நகரத்தில் அருகிலுள்ள இடத்திலோ அல்லது மொகலா கமிட்டி (Mohalla Committee) கூட்டத்திலோ செய்யலாம்.</li> <li>இத்திட்டம் குறித்த செய்திகளையும், செயல்முறைகளையும் பயன்களையும் மக்களிடையே பரப்பி பயனாளிகளைக் கண்டறிய வேண்டியது பஞ்சாயத்து மற்றும் நகராட்சியின் பணியாகும். இப்பணியில் தனியார் மற்றும் தொண்டு நிறுவனங்களின் உதவியையும், ஈடுபாட்டையும் வரவேற்று பஞ்சாயத்துகளும், நகராட்சிகளும் பயன்படுத்திக்கொள்ளலாம்.</li> </ul> <p style="text-align: justify;"><strong>மூலம்:</strong> <a class="ext-link-icon" title="புதிய சாளரத்தில் திறக்கும் ஒரு வெளி இணையதளம்" href="http://nsap.nic.in/" target="_blank" rel="noopener">தேசிய சமூக உதவி திட்டத்தின் வலைத்தளம்</a></p> <h3 style="text-align: justify;">தொடர்புடைய வளங்கள்</h3> <ol style="text-align: justify;"> <li style="text-align: justify;"><a class="ext-link-icon" title="புதிய சாளரத்தில் திறக்கும் ஒரு வெளி இணையதளம்" href="https://wcd.gov.in/" target="_blank" rel="noopener">பெண்கள் மற்றும் சிறுவர் நல அமைச்சகத்தின் வலைத்தளம்</a></li> </ol> </div>