<div id="MiddleColumn_internal"> <h3 style="text-align: justify;">நோக்கம்</h3> <p style="text-align: justify;">அரசு தாய்ப்பால் வங்கி திட்டம் அனைத்து மகப்பேறு மருத்துவமனைகளிலும் தொடங்கப்பட்டுள்ளது. இந்த வங்கியில் 200 லிட்டர் தாய்ப்பால் வரை சேமிக்க முடியும்.</p> <h3 style="text-align: justify;">முதல் வங்கி</h3> <p style="text-align: justify;">முதன்முறையாக அரசு குழந்தைகள் நல மருத்துவமனையில் 2014-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் தாய்ப்பால் வங்கி தொடங்கப்பட்டது. சோதனைத் திட்டமாகத் தொடங்கப்பட்ட இந்த வங்கிச் சேவை வெற்றி அடைந்ததால், மகப்பேறு மருத்துவமனை உள்பட ஏழு மருத்துவமனைகளில் வங்கிகள் தொடங்கப்பட்டுள்ளன.</p> <p style="text-align: center;"><img class="image-inline" src="https://static.vikaspedia.in/media_vikaspedia/ta/images/social-welfare/baeba4bcdba4bbfbaf-baebbeba8bbfbb2-b85bb0b9abc1-ba4bbfb9fbcdb9fb99bcdb95bb3bcd/ba4bbfb9fbcdb9fb99bcdb95bb3bcd/b8ab95bcdb95bc1bb5bbfb95bcdb95bc1baebcd-ba4bbfb9fbcdb9fb99bcdb95bb3bcd/copy_of_44.jpg" width="330" height="205" /></p> <h3 style="text-align: justify;">மகப்பேறு மருத்துவமனை</h3> <ul> <li style="text-align: justify;">மகப்பேறு மருத்துவமனையில் நாளொன்றுக்கு சுமார் 700 புறநோயாளிகள், 95 உள்நோயாளிகள் சிகிச்சை பெறுகின்றனர்; தினசரி சுமார் 50 பிரசவங்கள் நடைபெறுகின்றன.</li> <li style="text-align: justify;">ஓர் ஆண்டுக்கு சுமார் 14,000 முதல் 18,000 பிரசவங்கள் நடைபெறுகின்றன. ஆசியாவிலேயே அதிக பிரசவங்கள் இந்த மருத்துவமனையில் தான் நடைபெறுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.</li> </ul> <h3 style="text-align: justify;">தாய்ப்பால் வங்கி</h3> <p style="text-align: justify;">தாய்மார்களிடம் இருந்து தாய்ப்பாலை சேகரித்த பின் அவை 200 மி.லி. அளவுள்ள புட்டிகளில் அடைக்கப்பட்டு பதப்படுத்தும் கருவியில் பொருத்தப்படும். ஒரு முறைக்கு 2.4 லிட்டர் பாலை பதப்படுத்த முடியும். பாலில் கிருமித் தொற்று இருந்தால் அதை நீக்கும் வகையில் 62.5 டிகிரியில் 30 நிமிஷங்கள் தாய்ப்பால் பதப்படுத்தப்படும். பதப்படுத்தப்பட்ட பின்னும் பாலில் கிருமித் தொற்று உள்ளதா என்று மீண்டும் பரிசோதிக்கப்படும். கிருமித் தொற்று இல்லை என்பது உறுதி செய்யப்பட்ட பின் அது சேமித்து வைக்கப்படும். 200 லிட்டர் தாய்ப்பால் சேமிக்கும் வசதி மருத்துவமனையில் உள்ளது. சுமார் மூன்று முதல் ஆறு மாதங்கள் வரை தாய்ப்பாலை சேமித்து வைக்க முடியும்.</p> <h3 style="text-align: justify;">குறை மாதம்</h3> <ul> <li style="text-align: justify;">குறை மாதத்தில் அல்லது எடை குறைவாகப் பிறக்கும் குழந்தைகளுக்கு சாதாரண பிரசவத்தில் குழந்தை பெற்ற தாயின் பாலை வழங்க முடியாது. எனவே அத்தகைய தாய்மார்களின் பாலையும், சாதாரணமாக பிரசவம் நடைபெற்ற தாய்மார்களின் பாலையும் தனித்தனியாக சேமிக்க வசதி உள்ளது.</li> <li style="text-align: justify;">தாயும், குழந்தையும் வெவ்வேறு இடங்களில் சிகிச்சை பெற்று வந்தால் தாயிடம் இருந்து பாலை சேகரித்து தேவைப்படும் போது குழந்தைக்கு வழங்க முடியும். தாய்மார்களிடம் உபரியாக இருக்கும் தாய்ப்பால் சேகரிக்கப்பட்டு தேவையுள்ள வேறு குழந்தைகளுக்கும் வழங்க முடியும். ரத்த தானத்தைப் போன்று தானம் செய்ய விருப்பமுள்ள தாய்மார்கள் தாய்ப்பாலை தானமளிக்க முடியும்.</li> </ul> <h3 style="text-align: justify;">பயனாளிகள்</h3> <ul> <li style="text-align: justify;">தாய்ப்பால் சுரக்காத அல்லது குறைவாகச் சுரக்கும் தாய்மார்களின் குழந்தைகள், எச்ஐவி, ஹெபடைடிஸ் பி, சி பாதிப்புள்ள தாய்மார்களின் குழந்தைகள், தத்தெடுக்கப்பட்ட குழந்தைகளுக்கு தானம் பெறும் தாய்ப்பாலை வழங்க முடியும்.</li> <li style="text-align: justify;">பொதுமக்கள் விரும்பினால் ஒரு மருத்துவ அதிகாரியின் பரிந்துரைக் கடிதம் மூலம் வங்கியில் உள்ள தாய்ப்பாலைப் பெற்றுப் பயன்படுத்தலாம்</li> </ul> <p style="text-align: justify;">ஆதாரம்: தமிழ்நாடு அரசு மக்கள் நலவாழ்த்துறை</p> </div>