வீர, தீரச் செயல்களுக்கான "அண்ணா பதக்கம்" ஒவ்வொரு ஆண்டும் மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்களால், குடியரசு தின விழாவின் போது வழங்கப்படுகிறது. இப்பதக்கம் எந்தவொரு குடிமக்களுக்கும், வயதினை பொருட்படுத்தாமல், பொதுமக்களின் உயிர் மற்றும் சொத்தினைக் காப்பதில் அவர் ஆற்றிய வீர தீர செயலுக்காக வழக்கப்படுகிறது. தகுதி வீர, தீரச் செயல் புரிந்த தமிழகத்தைச் சேர்ந்த விண்ணப்பதாரர்கள் மட்டுமே இப்பதக்கத்தினைப் பெறத் தகுதியுடையவராவர். பொதுமக்களில் மூவருக்கும், அரசு ஊழியர்களில் (சீருடை பணியாளர்கள் உட்பட) மூவருக்கும் இப்பதக்கங்கள் வழங்கப்படும். பதக்கம் பெற வயது வரம்பு ஏதுமில்லை. இவ்விருது ரூ. 100000 (ரூபாய் ஒரு இலட்சம் மட்டும்)-க்கான காசோலை, ஒரு பதக்கம் மற்றும் தகுதியுரை ஆகியவை கொண்டதாகும். இப்பதக்கம் வட்ட வடிவத்தில் தங்க முலாம் பூசிய வெள்ளியால் (3/3 விட்ட அளவில்) தயாரிக்கப்பட்டிருக்க வேண்டும். இப்பதக்கத்திற்கான செலவு ரூ.5000/- (ரூபாய் ஐந்தாயிரம் மட்டும்) ஆக இருக்க வேண்டும். இப்பதக்கம் மாண்புமிகு முதலமைச்சர் அவர்களால் குடியரசு தினத்தன்று வழங்கப்படும். விண்ணப்பிக்கும் முறை ஒவ்வொரு ஆண்டும் 'வீரதீரச் செயல்களுக்கான அண்ணா பதக்கம்' விருதுக்கு பரிந்துரைகள் கோரப்படுகின்றன. வீரதீரச் செயல்களுக்கான அண்ணா விருதுக்கான விண்ணப்பங்கள் / பரிந்துரைகள் இந்த நோக்கத்திற்காக வடிவமைக்கப்பட்ட https://awards.tn.gov.in என்ற இணையதளத்தில் மட்டுமே பெறப்படும். வீரதீரச் செயல்களுக்கான அண்ணா விருதுக்கான விண்ணப்பங்கள் / பரிந்துரைகள் இணையதளத்தில் அதற்கென உள்ள படிவத்தில் குறிப்பிடப்பட்டுள்ள விவரங்களை உள்ளடக்கியதாகவும், விருதுக்காக பரிந்துரைக்கப்படும் நபர்களின் வீரதீர செயல்களைப் பற்றி எடுத்துரைக்கும் தகுதியுரை (அதிகபட்சம் 800 வார்த்தைகளுக்கு மிகாமல் இருக்க வேண்டும்) தெளிவாகவும், தேவையான அனைத்து விவரங்களும் முறையாக நிரப்பப்படுவதை உறுதி செய்ய வேண்டும். வீரதீரச் செயல்களுக்கான அண்ணா விருதுக்கு விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள் 15 டிசம்பர் ஆகும். இணையதளத்தில் பெறப்படும் விண்ணப்பங்கள் / பரிந்துரைகள் மட்டுமே பரிசீலிக்கப்படும். உரிய காலத்திற்குள் பெறப்படாத விண்ணப்பங்கள் கண்டிப்பாக நிராகரிக்கப்படும். பதக்கம் பெறத் தகுதியுள்ளவர்கள், இதற்கென அரசால் நியமிக்கப்பட்ட தேர்வுக் குழுவால் தெரிவு செய்யப்படுவர். வெளியீடு: இயக்குநர், செய்தி மக்கள் தொடர்புத் துறை, சென்னை 9