<div id="Middlecolumn_internal"> <h3 style="text-align: justify;">தீனதயாள் உபாத்யாய கிராமப்புற திறன் வளர்ச்சித் திட்டம்</h3> <p style="text-align: justify;">2011 ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி வேலை செய்யக் கூடியவர்கள் ஐந்து கோடியே ஐம்பது லட்சம் பேர் இருந்தாகத் தெரிய வந்துள்ளது. ஆனால் 2020 ஆம் ஆண்டில் உலகம் முழுவதிலும் ஐந்து கோடியே எழுபது லட்சம் தொழிலாளர்களுக்கும் பற்றாக்குறை நிலவும் என்று கணக்கிடப்பட்டுள்ளது. எனவே, மக்கள் தொகை உபரியை, மக்கள் தொகை ஆதாயமாக மாற்றிக் கொள்ளும் அரிய வாய்ப்பு நமக்குக் கிடைத்துள்ளது. கிராமப்புறத்து ஏழை குடும்பங்களின் இளைஞர்களின் திறனை மேம்படுத்தி அதனால் அவர்களின் உற்பத்தித் திறனைப் பெருக்கி, அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சித் திட்டங்களில் அவர்களையும் சேர்த்துக் கொள்ளும் தேசிய இலக்கினை எட்டும் நோக்கத்தில் மத்திய ஊரக வளர்ச்சி அமைச்சகம் தீனதயாள் உபாத்யாய கிராமப்புற திறன் வளர்ச்சித் திட்டத்தை செயல்படுத்துகிறது.</p> <p style="text-align: justify;">முறையான படிப்பறிவு இல்லாமை, சந்தைப்படுத்தக் கூடிய திறன் இன்மை போன்ற காரணங்களால் கிராமப்புறத்து ஏழை மக்கள் நவீனயுகத்தில் போட்டியிடுவதால் மிகவும் சிரமப்படுகிறார்கள். இந்த இடைவெளியை நிரப்புவதற்காக, சர்வதேச தரத்திலான பயிற்சிகளை கிராமப்புற மக்களுக்கு வழங்கும் திட்டங்களுக்கு தீனதயாள் உபாத்யாய கிராமப்புற திறன் வளர்ச்சித் திட்டம் நிதி உதவி அளிக்கிறது. பயிற்சிக்குப் பின்னர் வேலைவாய்ப்பு, வேலையில் உயர்வு, வெளிநாடுகளில் வேலைவாய்ப்பு போன்றவற்றுக்கும் முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது.</p> <h3 style="text-align: justify;">தீனதயாள் உபாத்யாய கிராமப்புறத் திறன் வளர்ச்சித் திட்டத்தின் சிறப்பு அம்சங்கள்</h3> <ol style="text-align: justify;"> <li>ஏழைகள் மற்றும் விளிம்பு நிலை மக்களுக்கு பயன் கிடைக்கிறது. அவர்களுக்கு எந்த விதமான செலவும் இல்லாமல் திறன் பயிற்சிகள் அளிக்கப்படுகிறது.</li> <li>அனைவரையும் உள்ளடக்கிய திட்டம், சமூகரீதியாக பின்தங்கியுள்ள ஆதிதிராவிடர் / பழங்குடியினர் 50% சிறுபான்மையினர் 15% பெண்கள் 33% என்று திறன் பயிற்சி பெறுபவர்கள் தேர்ந்தெடுக்கபடுவார்கள்.</li> <li>பயிற்சிக்கு முக்கியத்துவம் என்பதை மாற்றி, வேலையில் உயர்வு என்பதற்கு முக்கியம் அளிக்கப்படும். அதனால், தற்போது ஒரு வேலையில் இருப்பவர் தொடர்ந்து அதில் நீடிக்க வகை செய்வதுடன் அந்த வேலையில் முன்னேற்றம் கிடைக்கவும்., வாய்ப்புகள் இருந்தால் வெளிநாடுகளுக்கு சென்று வேலை பார்க்கவும் ஏற்பாடுகள் செய்யப்படும்.</li> <li>வேலை நியமனம் பெற்றவர்களுக்கு ஆதரவு, இதன்படி வேலை நியமனம் பெற்றவர்களுக்கு வேண்டிய ஆலோசனைகள் வழங்கப்பட்டு தேவையான உதவிகள் தரப்படுவதுடன் வேலைக்காக புதிய இடத்திற்கு செல்வதற்கும் அங்கு தங்கியிருப்பதற்குமான உதவிகளும் செய்து தரப்படும். பயிற்சி பெற்ற அனைவரும் பரஸ்பரம் தொடர்பில் இருப்பதற்கான கட்டமைப்பும் ஏற்படுத்தப்படும்.</li> <li>பயிற்சி பெறுகிறவர்கள் வேலை நியமனம் பெறுவதற்கு அதிக கவனம் செலுத்தப்படும். பயிற்சி பெற்றவர்களில் குறைந்த பட்சம் 75 சதவீதம் பேராவது வேலை பெறுவது உறுதி செய்யப்படும்.</li> <li>பயிற்சி திட்டத்தை செயல்படுத்தும் பங்காளர்களின் எண்ணிக்கையை மேம்படுத்துதல். கிராமப்புற இளைஞர்களுக்கு திறன் பயிற்சிகள் அளிக்கக் கூடிய புதிய முகமைகளை உருவாக்குவதுடன், அந்த முகமைகளின் பயிற்றுவிக்கும் திறன்களும் வளர்த்தெடுக்கப்படும்.</li> <li>சில குறிப்பிட்ட பகுதிகளுக்கு முக்கியத்துவம் கவனம் செலுத்தப்படும். ஜம்மு காஷ்மீர் (HIMAYAT) வடகிழக்கு மாநிலங்கள், இடது சாரி தீவிரவாதத்தால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகள் (ROSHINI) ஆகிய பகுதிகளில் உள்ள கிராமப்புற ஏழை இளைஞர்களுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்படும்</li> <li>தரமான பயிற்சிகள் அளிக்கப்படும். எல்லாவிதமான திறன் பயிற்சிகளுக்கும் நிலையான செயல்முறைகள் வரையறுக்கப்படும். எனவே, உள்ளுர் மட்டத்தில் அவற்றை சௌகாரியம் போல மாற்றிக் கொள்ள முடியாது. பயிற்சிகள் பற்றிய ஆய்வுகளின் புகைப்பட / வீடியோ பதிவுகளில் கூட நாளும் நேரமும் பதிவு செய்யப்படும்.</li> </ol> <h3 style="text-align: justify;">பயிற்சி பெறுவதற்கான தகுதிகளும் செயல்படுத்தும் விதமும்</h3> <ol style="text-align: justify;"> <li>15 வயது முதல் 35 வயது வரை உள்ள கிராமப்புற இளைஞர்கள்</li> <li>ஆதிதிராவிடர் / பழங்குடியினர் / பெண்கள் / மாற்றுத் திறனாளர்கள் எனில் வயது வரம்பு 45 வரை</li> <li>தீனதயாள் உபாத்யாய கிராமப்புற திறன் வளர்ச்சித் திட்டம் மூன்றடுக்கு முறையில் அமல்படுத்தப்படுகிறது. மத்திய ஊரக வளர்ச்சி அமைச்சகத்தில் உள்ள இத்திட்டத்தின் தேசியத் தன்மை அலகு, கொள்கை வரைவு, தொழில்நுட்ப ஆதரவு போன்றவற்றை அளிக்கும். மாநிலங்களில் உள்ள அலகுகள் செயல்படுத்துவதற்கான ஆதரவை அளிக்கும். பயிற்சித் திட்ட அமலாக்க முகமைகள், பயிற்சி மற்றும் வேலைக்கு அமர்த்தல் ஆகியவற்றை மேற்கொள்ளும்.</li> </ol> <h3 style="text-align: justify;">பயிற்சித் திட்ட அமலாக்க முகமைகள்</h3> <ol style="text-align: justify;"> <li>இந்திய அறக்கட்டளை சட்டம் அல்லது மாநில சங்கப் பதிவு சட்டம் அல்லது மாநில கூட்டுறவு சங்க சட்டம், அல்லது பல மாநில கூட்டுறவு அல்லது கம்பெனிகள் சட்டம் 2013 அல்லது பொறுப்பு வரம்பற்ற கூட்டாண்மை சட்டம் 2008 ஆகியவற்றில் ஏதாவது ஒன்றின் கீழ் பதிவு செய்யப்பட்டிருக்க வேண்டும். அல்லது மாநில அளவிலோ தேசிய அளவிலோ செயல்படும் அரசுத் துறை அல்லது அரசு சார்ந்த துறையாக இருக்க வேண்டும்.</li> <li>இந்தியாவில் ஒரு சட்டப்பூர்வ அமைப்பாக மூன்று நிதி ஆண்டுகளுக்கு மேல் செயல்பட்டிருக்க வேண்டும். (தேசிய திறன் மேம்பாட்டுக் கழக பங்காளர்களுக்கு இந்த நிபந்தனை கிடையாது.)</li> <li>மூன்று நிதியாண்டு வரவு செலவு கணக்கில் குறைந்தபட்சம் இரண்டு நிதியாண்டுகளில் நிகர மதிப்பு எதிர்மறையாக இருக்கக் கூடாது. (தேசிய திறன் மேம்பாட்டுக் கழக பங்காளர்களுக்கு இந்த நிபந்தனை பொருந்தாது).</li> <li>பயிற்சி திட்டத்திற்கான மதிப்பீட்டை விட, வரவு – செலவு மதிப்பு, குறைந்த பட்சம் 25 சதவீதம் கூடுதலாக இருக்க வேண்டும்.</li> <li>கீழ் காணும் வசதிகளை அளிக்கும் பயிற்சித் திட்ட அமலாக்க முகமைகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.</li> </ol> <ul> <li style="list-style-type: none;"> <ul style="text-align: justify;"> <li>வெளிநாடுகளில் வேலை வாங்கித் தருதல்</li> <li>தமது நிறுவனத்திலேயே வேலைவாய்ப்பு தருதல்</li> <li>தொழிற்சாலைகளிடம் இருந்து நிதி உதவி பெற்று பணி பழகுநர்களுக்கு பயிற்சி அளித்தல்</li> <li>இரண்டாண்டுகளில் குறைந்தபட்சம் பத்தாயிரம் இளைஞர்களுக்கு பயிற்சி அளித்து வேலையில் அமர்த்துவதற்கு உத்தரவாதம் அளித்தல்.</li> <li>தேசிய தரமதிப்பீட்டு குழுவினால் குறைந்தபட்சம் 3.5 புள்ளிகள் வழங்கப்பட்ட கல்வி நிறுவனங்கள், பல்கலைக்கழக நிதி நல்கைக் குழு அல்லது அனைத்திந்திய தொழில்நுட்பக் கல்விக் குழுவின் சான்று பெற்ற சமுதாயக் கல்லூரிகள்.</li> </ul> </li> </ul> <h3 style="text-align: justify;">பயிற்சி திட்டத்திற்கான நிதி ஆதரவு</h3> <p style="text-align: justify;">தொழில் துறையினர் வேண்டுகிற திறன்களை பயிற்சி மூலம் வழங்கி, அவ்வாறு பயிற்சி பெற்றவர்களுக்கு வேலைவாய்ப்பு ஏற்படுத்தி தருகிற முகமைகளுக்கு பயிற்சி திட்டத்தின் கால அளவு மற்றும் உண்முறை வசதிகளைப் பொறுத்து ஒரு பயிற்சியாளருக்கு குறைந்தபட்சமாக ரூ. 25,690 முதல் அதிகபட்சமாக ரூ. 1 லட்சம் வரை நிதி உதவி அளிக்கப்படும். பயிற்சி காலம் குறைந்தது 576 மணி நேரம் (மூன்று மாதங்கள்) முதல் 2304 மணி நேரம் (12 மாதங்கள்) வரை இருக்கலாம்.</p> <p style="text-align: justify;">பயிற்சி அளிப்பதற்கான செலவு, உணவு மற்றும் தங்குமிட செலவு (உண்முறை திட்டங்களில் மட்டும்) போக்குவரத்து செலவு, வேலைக்கு அமர்த்திய பிறகு தரப்படும் ஆதரவிற்கான செலவு, வேலையில் உயர்நிலைக்கு போவதற்கான செலவு போன்றவை நிதி உதவியில் அடங்கும்.</p> <h3 style="text-align: justify;">எதிர்பார்ப்புகள்</h3> <p style="text-align: justify;">தீனதயாள் உபாத்யாய கிராமப்புற திறன் வளர்ச்சித் திட்டத்தின் கீழ் 250க்கும் மேற்பட்ட பிரிவுகளில் திறன் பயிற்சி அளிக்க நிதி உதவி அளிக்கப்படும். கட்டுமானம், ஆடோமொபைல், தோல் பொருள்கள், மின் சாதனங்கள், குழாய் பொருத்துநர், நவரத்தின கற்கள், ஆபரணங்கள், உணவகம், தங்கும் விடுதி, சில்லறை வாணிகம் போன்ற பல்வேறு தொழில்களில் வேலை செய்வதற்கான திறன்களை தருவதாக பயிற்சிகள் இருக்க வேண்டும். அவ்வாறு பயிற்சி பெறும் கிராமப்புற இளைஞர்களில் குறைந்து 75% பேருக்கு வேலை நியமனம் உறுதி செய்யப்பட வேண்டும்.</p> <p style="text-align: justify;">தேசிய தொழிற்பயிற்சி கவுன்சில் (NCVT) மற்றும் துறைகள் திறன் கவுன்சில் போன்ற தேசிய அளவிலான அமைப்புகள் நிர்ணயித்துள்ளவாறு பாடத்திட்டங்கள் பின்பற்ற வேண்டும்.</p> <p style="text-align: justify;">ஒரு குறிப்பிட்ட துறைக்கான திறன் பயிற்சி அளிப்பதோடு, வேலை கிடைப்பதாகவும், அப்பயிற்சி இருக்க வேண்டும். மேலும் மென்திறன், செயல்முறை ஆங்கில அறிவு, செயல்முறை கணினி அறிவு போன்றவையும் வழங்கப்பட வேண்டும்.</p> <p style="text-align: justify;">இந்த திட்டம் நாடு முழுமைக்கும் ஆனது. தற்சமயம் 13 மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்களில் உள்ள 460 மாவட்டங்களில், 82 பயிற்சி முகமைகள் மூலம் 18 விதமான தொழில் திறன் பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகின்றன.</p> <p style="text-align: justify;">ஆதாரம்: <a class="external-link ext-link-icon" title="புதிய சாளரத்தில் திறக்கும் ஒரு வெளி இணையதளம்" href="http://ddugky.gov.in/" target="_blank" rel="noopener">www.ddugky.gov.in</a></p> </div>