<div id="MiddleColumn_internal"> <h3 style="text-align: justify;">முன்னுரை</h3> <p style="text-align: justify;">சுகாதாரம் அல்லது சுத்தம் என்பது நலம் மற்றும் நலமான வாழ்வு கருதி ஒரு சமூகத்தால் பேணப்படும் பழக்க வழக்கங்களாகும். இந்திய நடுவணரசால் வழங்கப்படும் தேசிய ஊரக சுகாதார நலச்சேவைகள் மக்களுக்கு குறிப்பாக ஊரகப்புறத்தினர், வறியோர், பெண்டிர் மற்றும் குழந்தைகளுக்கு எளிதில் கிட்டும் வகை செய்யும் இலக்கைக் கொண்டு ஆரம்பிக்கப்பட்டதாகும். இத்திட்டம் 05.04.2005 இல் துவங்கப்பட்டது.</p> <h3 style="text-align: justify;">தூய்மை இந்தியா இயக்கம்</h3> <p style="text-align: justify;">தூய்மை இந்தியா இயக்கம் (அலுவல் முறையாக சுவச்ச பாரத் அபியான்), நாட்டின் 4041 நகரங்களில் உள்ள சாலைகள், கட்டமைப்புக்களை தூய்மைப்படுத்துவதற்காக இந்திய அரசு துவக்கியுள்ள இயக்கமாகும். இந்த இயக்கத்தை அக்டோபர் 2, 2014 அன்று புது தில்லியில் ராஜ்காட்டில் இந்தியப் பிரதமர் துவக்கி வைத்தார். காந்தி தங்கியிருந்த இல்லத்திற்கு வெளியே சாலையை சுத்தப்படுத்தி திட்டம் தொடங்கி வைக்கப்பட்டது. 3 மில்லியன் அரசுப் பணியாளர்களும் பள்ளி, கல்லூரி மாணவர்களும் பங்கேற்கும் இத்திட்டமே இந்தியாவின் மிகப் பெரும் தூய்மை இயக்கமாகும்.</p> <h3 style="text-align: justify;">சுத்தமான பாரத இயக்கத்தின் நோக்கம்</h3> <p style="text-align: justify;">நிர்மல் பாரத் அபியான் அல்லது சுத்தமான பாரத இயக்கம் திறந்த வெளியில் மக்கள் மல ஜலம் கழிப்பதை ஒழித்து, அனைத்து வீடுகளிலும், பொது இடங்களிலும் சுகாதாரமான நவீன கழிப்பறைகளை அமைப்பது.</p> <h3 style="text-align: justify;">கழிவறையின் தேவை</h3> <p style="text-align: justify;">கழிவுளை அவதானமாக அகற்ற வேண்டிய தேவை 1850 பின்னர் தெளிவாக உணரப்பட்டது, கழிவுகள் நீர்நிலைகளை களங்கப்படுத்தினால், அவற்றின் மூலம் நோய்கிருமிகள் பரவுவது ஏதுவாகிற்று.</p> <h3 style="text-align: justify;">முழுமையான சுகாதாரம்</h3> <p style="text-align: justify;">இப்புதிய திட்டம், 1999ஆம் ஆண்டு முதல் நடைமுறையில் இருந்து “முழுமையான சுகாதார இயக்கத்திற்கு” மாற்றாக, பொதுமக்கள் ஆதரவுடன் 01.07.2014 முதல் இந்திய நடுவண் அரசு, மாநில அரசுகளின் உதவியுடன் இந்தியா முழுவதிலும், குறிப்பாக ஊரகப்பகுதி வீடுகளில் நவீன கழிப்பறைகள் கட்ட ஊக்குவிக்கிறது. ஊரக பகுதிகளில், வீடுகள், பள்ளிகள், அங்கன்வாடிகள், மக்கள் கூடும் பொது இடங்களில், கழிப்பறை வசதி நிர்மல் பாரத் அபியான் திட்டத்தின் கீழ் ஏற்படுத்தப்பட்டு வருகிறது.</p> <p style="text-align: justify;">ஊரக பகுதிகளில் ஒருங்கிணைந்த ஆண்கள் சுகாதார வளாகம் மற்றும் ஒருங்கிணைந்த பெண்கள் சுகாதார வளாகம் கட்டுதல் ஆகிய பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. நிதி உதவி இந்திய அரசு நவீன கழிப்பிடம் கட்ட ஒவ்வொரு குடும்பத்திற்கும் ரூபாய் பத்தாயிரம், மாநில அரசுகள் மூலம் மானியமாக வழங்குகிறது.</p> <h3 style="text-align: justify;">விழிப்புணர்வு இயக்கம்</h3> <p style="text-align: justify;">கழிப்பறையின் அவசியம் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், இந்திய மாவட்ட நிர்வாகங்கள், “நிர்மல் அபியான்” எனும் பெயரில், ஒவ்வொரு மாவட்டத்திலும், இந்தியாவில் நூறு விழுக்காடு கழிப்பறைகள் கட்டும் திட்டத்தை நிறைவேற்றும் வகையில் விழிப்புணர்வு இயக்கம் நடத்தப்படுகிறது.</p> <p style="text-align: justify;">சுகாதாரமான கழிவறையின் முக்கியத்துவத்தை விளக்க ஆண்டுதோறும் நவம்பர் 19ஆம் நாள் உலகக் கழிவறை நாள் உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. உலகெங்கிலும் கிட்டத்தட்ட 260 கோடி மக்கள் அடிப்படை கழிவறை வசதிகளற்றும் அதனுடன் தொடர்புள்ள பிற சுகாதார சிக்கல்களையும் எதிர்கொள்கின்றனர். இதுகுறித்து போதுமான விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலும், அம்மக்களுக்கு கழிவறை வசதிகளை ஏற்படுத்தி தரக் கோரியும், கடந்த 2001ஆம் ஆண்டு முதல் நவம்பர் மாதம் 19ஆம் தேதியை வருடந்தோறும் உலக கழிவறை நாளாக கடைபிடித்து வருகிறது. அன்றைய தினத்தில் கழிப்பறை சார்ந்த பிரச்சனைக்குத் தீர்வு காணும் வகையில் பல மாநாடுகள், பேரணிகள் உலகெங்கிலும் நடைபெறுகின்றன. இந்தியாவில் தொலைக்காட்சி இணைப்புகள் மற்றும் தொலைபேசி இணைப்புகளைக் காட்டிலும் கழிப்பறை வசதிகள் குறைவாக உள்ளது என்ற தகவல் நம் புருவத்தை உயர வைக்கிறது.</p> <h3>புள்ளிவிவரங்கள்</h3> <p style="text-align: justify;">ஒட்டுமொத்த இந்தியாவில் திறந்தவெளியில் மலம் கழிப்போரின் எண்ணிக்கை மட்டும் கிட்டத்தட்ட 60 கோடி. (இதில் 50% பெண்கள் என்பது வேதனை தரும் உண்மை). உலகின் அதிகமான குழந்தைகளின் எண்ணிக்கையை கொண்ட நாடுகளின் வரிசையில் இந்தியா முதலிடத்தில் உள்ளது. அதாவது 50 கோடி இந்தியர்கள் 18 வயதிற்கும் குறைவானவர்கள். இதில் 1 முதல் 5 வயதிற்குட்பட்ட குழந்தைகள் காய்ச்சல் மற்றும் வயிற்றுப்போக்கால் பாதிக்கப்பட்டு ஓர் ஆண்டில் உயிரிழக்கும் எண்ணிக்கை மட்டும் 6 லட்சம். இது உலகளவில் நீர் சார்ந்த நோயினால் உயிரிழக்கும் குழந்தைகளின் எண்ணிக்கையில் 30% ஆகும்.</p> <p style="text-align: justify;">இந்தியக் குழந்தைகள் சராசரிஉயரத்தை விட குறைவாக வளர்ச்சி குன்றி இருப்பதற்கு திறந்தவெளி மலம் கழிப்பு முக்கிய காரணமாய் இருப்பதாக சமீபத்திய ஆய்வொன்று தெரிவிக்கிறது. தமிழ்நாட்டில் 57% குடும்பதாரர்களின்  வீட்டினில் கழிவறை வசதிகளற்று திறந்தவெளியில் மலம் கழிக்கின்றனர் என்று சமீபத்திய தேசிய குடும்ப நல அறிக்கை தெரிவிக்கிறது.</p> <p style="text-align: justify;">அதாவது 7 கோடி மக்கள் தொகை கொண்ட தமிழகத்தில் கிட்டத்தட்ட நான்கு கோடி மக்கள் கழிவறை வசதிகளற்று இருக்கின்றனர். இதில் 50% மக்கள் பொதுக் கழிப்பறையை பயன்படுத்துகிறார்கள் என்று வைத்துக்கொண்டாலும் இரண்டு கோடி மக்கள் ஆற்றங்கரைகள், கண்மாய்கள், கடற்கரைகள், வயல்வெளிகள் போன்ற திறந்த வெளியிடங்களில் மலம் கழிக்கின்றனர்.</p> <p style="text-align: justify;">தமிழகத்தில் உள்ள கிராமப்பகுதிகளில்  75% குடும்பதாரர்கள் திறந்தவெளியில் மலம் கழிக்கின்றனர். 2% குடும்பத்தார்கள் வீடுகளில் மட்டுமே குழாய்கள் மூலம் ஒன்றிணைக்கப்பட்டுள்ள கழிப்பறை அமைப்பு இருக்கிறது. 2000ஆம் ஆண்டில்  அறிமுகப்படுத்தப்பட்ட முதல் முழு சுகாதார இயக்கம் இன்னும் போதிய செயல்பாட்டளவை எட்டவில்லை. கழிப்பிடங்கள் கட்டுவதற்கு அரசு கொடுக்கம் மானியத் தொகையான 2500 ரூபாயில் வெறும் நான்கு பக்க சுவர் மட்டுமே கட்ட முடிகிறதென்றும், கட்டுமான பொருட்களின் விலை ஏற்றத்தால் இம்மானியம் போதுமானதாக இல்லை என்பதும் பயனாளிகளின் கோரிக்கை.</p> <h3>கழிவறை அமைப்பதற்கான மானியம்</h3> <p style="text-align: justify;">விருது மற்றும் ரொக்கப்பரிசு நூறு விழுக்காடு நவீன கழிப்பறைகள் கொண்ட ஊராட்சிகளுக்கு, நிர்மல் கிராம விருதும், பணப்பரிசும் வழங்கப்படுகிறது. தனி நபர் கழிவறை குறித்த விழிப்புணர்வு சுகாதார பாரத இயக்கம் சார்பில் தனிநபர் கழிவறை அமைக்க கடந்த 5 மாதங்களாக நடைபெற்று வரும் விளம்பர பிரசாரத்தால் இதுவரை 600க்கும் மேற்பட்டவர்கள் பயனடைந்துள்ளனர். திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கம் அருகே சுகாதார பாரத இயக்கம் சார்பில் தனிநபர் கழிவறை அமைப்பது தொடர்பாக வழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் அரங்கு அமைக்கப்பட்டுள்ளது. அங்கு வரும் மக்களுக்கு சுகாதாரம் குறித்தும், அரசு மானியத்துடன் தனிநபர் கழிவறை அமைக்கும் திட்டம் குறித்தும் துண்டுப்பிரசுரம் வழங்கி விழிப்புணர்வுப் பிரசாரம் செய்யப்பட்டு வருகிறது. இந்தத் திட்டத்தில் கழிவறை அமைக்க பதிவு செய்வோருக்கு மத்திய அரசின் பங்களிப்பாக ரூ. 3200 மாநில அரசின் பங்களிப்பாக ரூ. 2500, பயனாளியின் பங்களிப்பாக ரூ. 900 சேர்த்து ரூ. 6600 வழங்கப்படுகிறது. இதுதவிர, தேசிய ஊரக வேலை உறுதித் திட்டப்பணி மூலம் ரூ. 4500 வழங்கப்படுகிறது. அதன்படி, தனிநபர் கழிவறை அமைக்க மொத்தம் ரூ. 11100 வழங்கப்படுகிறது.</p> <p style="text-align: justify;">ஆதாரம் : திட்டம் மாத இதழ்</p> </div>