<div id="Middlecolumn_internal"> <h3 style="text-align: justify;">சமூதாயம் ஓர் பூந்தோட்டம், குப்பைத்தொட்டி அல்ல...</h3> <p style="text-align: justify;">நம் நாடு பெரும் அளவில் முன்னேற்றம் அடைந்து கொண்டிருக்கிறது. ஒரு காலத்தில், நம் நாட்டை விட்டு வெளிநாட்டில் குடியேறிவிட்டால் நாம் எதையோ சாதித்து விட்டோம் என்ற உணர்வு கிடைக்கும். ஆனால் இப்போதைய காலகட்டத்தில், நம் நாட்டில் இல்லாத ஒன்றா அங்கு இருக்கப் போகிறது என்ற கேள்வி நமக்குள் எழுகிறது.</p> <p style="text-align: justify;">சாதிக்கப் பிறந்த நாமும், சாதிக்க வழி வகுத்துக் கொடுக்கும் நம் நாட்டையையும் விட்டு நாம் ஏன் செல்ல வேண்டும் என்ற உணர்வும் கேள்வியும் நம்முள் எழுகிறது.</p> <p style="text-align: justify;">அனைத்துத் துறைகளிலும் போட்டி போட்டு சாதித்துக் கொண்டிருக்கும் இவ்வேளையில், ஒரே ஒரு விஷயத்தில் மட்டும் நாம் என்றுமே அண்டை நாட்டைப் பார்த்து பிரமிக்க வேண்டும் என்ற தலையெழுத்தை நினைத்து வெட்கப்படுவதா அல்லது வேதனைப்படுவதா என்று புரியவில்லை.</p> <p style="text-align: justify;">பல்வேறு நாடுகளில் இருந்தும் சுற்றுலா பயணிகள் வர விரும்பும் நாடு இந்தியா. அப்படிப்பட்ட நாட்டில், சிங்காரச் சென்னையைத் தெரியாதவர்கள் எவருமே இருக்க முடியாது.</p> <p style="text-align: justify;">அண்ணார்ந்து பார்த்து வியக்கவைக்கும் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள், ஐந்து நட்சத்திர ஹோட்டல்கள், சொகுசு வாகனங்கள் என இன்னும் சொல்லிக்கொண்டே போகும் அளவிற்கு பல வகையான அதிசயங்களும் ஆச்சிரியங்களும் நம்மை சூழ்ந்து கொண்டிருக்கும் இத்தருணத்தில், நம் சாலையில் அடர்ந்து கிடக்கும் குப்பைகளையும், திறந்த வெளி சாக்கடைகளையும், கழிவுகளையும் பார்த்தால் இதைத்தான் 'நரகம்' என்று கூறுவார்களோ என்று ஒரு நிமிடம் சிந்திக்க வைக்கிறது.</p> <p style="text-align: justify;">இதற்குக் காரணம், சமூகமா அல்லது தனிநபரா என்று தெரியவில்லை. ஆனால் ஒன்று மட்டும் தெளிவாகப் புரிகிறது. ஒவ்வொரு மனிதனின் அலட்சியம் கலந்த சுயநலமே இதற்கு முழு காரணம் ஆகும். தன்னைப் பற்றி மட்டுமே யோசித்து செயல்படுபவர்களிடம் ‘சமுதாய உணர்வு’ என்ற வார்த்தைக்கே இடம் இருக்காது.</p> <p style="text-align: justify;">உதாரணத்திற்கு, நமது வீட்டில் நாம் ஏன் கழிவறைகளை பயன்படுத்த வேண்டும். ஏனென்றால், ஒவ்வவொருவருக்கும் அதன் அத்தியாவசியத்தைப் பற்றி நன்றாகத் தெரியும். கடல் போல் வீடு இருந்தாலும் எதையெதை எங்கு செய்ய வேண்டுமோ, அதனை அங்குதான் செய்கின்றோம்.</p> <p style="text-align: justify;">நமது வீட்டை எந்த அளவுக்கு நாம் சுத்தமாக வைக்க நினைக்கின்றோமோ, அதைவிட பல மடங்கு நாம் நம் சமுதாயத்தைப் பாதுகாக்க வேண்டும் என்ற எண்ணம் எப்பொழுதும் இருக்க வேண்டும்.</p> <p style="text-align: justify;">வீட்டை விட்டு வெளியில் கால் வைத்த அடுத்த நிமிடமே நாம் சுயநலம் மற்றும் அலட்சியத்தின் மறுவுருவாக மாறி பொது இடங்களை நாசப்படுத்தத் தயாராகி விடுகின்றோம்.</p> <p style="text-align: justify;">போராடிக் கிடைத்த நம் நாட்டின் சுதந்திரத்தை, சுதந்திரமாக நாசப்படுத்துவது ஒரு உண்மையான உணர்வுள்ள குடிமகனுக்கு அழகில்லை. பொது இடத்தில் துப்புவதில் மட்டும் பல்லாயிரக்கணக்கான கிருமிகள் தாக்கக்கூடிய ஆற்றல் உள்ளது. நாம் சாலையில் வீசும் குப்பைகளால் சுற்றுப்புறசூழலும் நமது உடல்நலமும் பெரிதளவில் பாதிக்கப்படுகின்றன.</p> <p style="text-align: justify;">சமீபத்தில், உலகை உலுக்கிய ‘எபோலா’ வைரஸ் பல உயிர்களை பறித்து சென்றது. அதற்கான மருந்தும் இன்னும் ஆராய்ச்சியில் உள்ளது. ஒரு சராசரி மனிதனாக, இதைப் பார்த்து கவலைப்படவும், ஆழ்ந்த அனுதாபத்தையும் மட்டுமே தெரிவிக்க முடியும். எபோலா வைரஸ் போன்ற பல கொடிய நோய்களுக்கு இன்னும் மருந்துகள் கண்டுபிடிக்கப்பட்டு வருகின்றன.</p> <p style="text-align: justify;">இந்த சூழ்நிலையில், நம் சமுதாயத்தை நாம் நாசப்படுத்திக்கொண்டே இருந்தோம் என்றால், இதனால் வரும் புதிய நோயைப் பற்றி ஆச்சிரியப்படுவதற்கு ஒன்றும் இல்லை. பின்பு அதற்கான மருந்துகள் ஆராய்ச்சியில் மேற்கொள்ளப்பட்டு, பல இன்னல்களை சந்திக்க நேரிடலாம்.</p> <p style="text-align: justify;">சமுதாய அக்கறை என்பது, ஒவ்வொரு மனிதனின் அங்கமாக திகழவேண்டும். நமது அக்கறை மற்றவர்களுடைய விழிப்புணர்வுக்கு ஓர் பாதையாக அமைய வேண்டும்.</p> <p style="text-align: justify;">எல்லோரும் செய்யாத குற்றத்தையா நான் செய்கிறேன் என்ற பொறுப்பில்லாத கேள்வியையும் சிந்தனையையும் விட்டுவிட்டு, என் சமுதாயத்திற்கு நான் செய்யும் கடமை என் சமுதாயத்தைப் பாதுகாப்பது என்ற உணர்வே ஓர் உண்மையான குடிமகனின் அடையாளமாகும்.</p> <p style="text-align: justify;">‘என் வாழ்க்கை, என் குடும்பம், என் குழந்தை’ என்ற உணர்வு எப்படி நம் மனதில் ஆணித்தரமாக பதிந்துள்ளதோ, அதேபோல், 'என் மக்கள், என் நாடு, என் சமுதாயம்' என்ற உணர்வும் நாம் சுவாசிக்கும் இறுதி மூச்சு வரை இருக்க வேண்டும்.</p> <p style="text-align: justify;">ரேவதி ராம்குமார்</p> </div>